[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 331 - துரோகங்களுக்கு வாய்ப்பளிக்காதீர்கள்!"
- ம.சு.கு
- Sep 5, 2023
- 2 min read
“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?"
தொடர் கட்டுரையின் அத்தியாயம்-331
துரோகங்களுக்கு வாய்ப்பளிக்காதீர்கள்...!
திரைப்படத்தில் கதாநாயகன் கூட்டத்தை வீழ்த்த, எப்போதும் வில்லன் அந்த கதாநாயகன் கூட்டத்தில் யாராவது ஒருவனை பணத்தாசை காட்டி தங்கள் ஒற்றனாக்கி விடுவார்கள். அதேபானியை கதாநாயகனும் கையாண்டு அந்த வில்லனை வீழ்த்துவார். பின் அந்த வில்லன் அணியில் இருந்து பணத்தாசையினால் அவனுக்கு துரோகம் செய்தவனையும், தன்னுடைய அணியிலிருந்து துரோகம் செய்தவனையும் கொன்றுவிடுவார். இப்படித்தான் எல்லா படங்களும் முடிகின்றன. ஏன் தனக்கு உதவிபுரிந்த அந்த வில்லனின் உதவியாளனை கதாநாயகன் கடைசியில் கொல்கிறான்?
நிறுவனங்களில் பணிபுரியும்போது, உங்களுடன் அன்றாடம் பேசிப்பழகும் நண்பர்கள் தான், உங்கள் வளர்ச்சிக்கும் போட்டியாளர்களாக இருப்பார்கள். இது இருவருக்கும் தெரிந்த விடயம்தான். ஆனால், அந்த போட்டி ஆரோக்கியமானதாக, வெளிப்படையானதாகவே எப்போதும் இருக்கும் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. முக்கிய திட்டங்கள் யாருக்கு வழங்கப்படுகிறது, யாருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு வழங்கப்படுகிறது என்ற போட்டியில், நிறைய உள்குத்துகளும், அரசியலும் நடக்கும். அங்கு போட்டிகளோடு, பொறாமைகள் வளர்ந்து சதிகளும் நடக்கக்கூடும். இவற்றையெல்லாம் சமாளிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
பணத்தாசையினால் ஒருவன் தன் எஜமானனை காட்டிக்கொடுக்கிறான் என்றால், அவன் எந்த அணியில் இருந்தாலும் அது ஆபத்துதான். அப்படி ஏமாற்றுபவர்கள், துரோகிகள் என்று இனங்கண்டபின், அவர்களை தன் கூட்டத்தில் வைத்திருக்க கதாநாயகர்கள் விரும்புவதில்லை. அதனால் தான் திரைப்படத்தில் அவர்கள் கதையையும் கடைசியில் முடித்துவிடுகிறார். நிஜ வாழ்க்கையில் அப்படி யாரெல்லாம் துரோகிகள் என்று நீங்கள் இனங்கண்டுள்ளீர்கள்? அவர்களிடம் இருந்து எப்படி விலகினீர்கள்?
போட்டிகள் நிறைந்திருக்கும் இடங்களில், திறமையற்றவர்கள் எண்ணங்களில் பொறாமை வளர்வது மனித இயல்பு. பழகிய நண்பர்கள் சிரித்து பேசுகிறார்கள் என்று முழுமையாக நம்பி இங்கு ஏமாந்தவர்கள் மிகமிக அதிகம். அரசியலில், கூடவே இருந்து குழிபறித்து மேலேறியவர்கள் தான் அதிகம். குடும்ப உறவுகளில், கோள்மூட்டி பிரச்சனையை பெரிதுபடுத்துபவர்களால்தான் எல்லா சிக்கல்களும் வருகின்றன. இவையனைத்தையும் செய்பவர்கள் வெளிநபர்கள் அல்ல. அன்றாடம் நம்மோடு சிரித்தப்பேசி நேரம் கழிப்பவர்கள் தான் இதை செய்கிறார்கள் என்பதுதான் நமக்கு அதிர்ச்சிகரமான உண்மை;
போட்டி நிறுவனங்கள் வளர்ந்துவிடாமல் இருக்க, பெரு நிறுவனங்கள், விலை மாற்றங்கள், சட்ட சிக்கல்கள், துரோகச் செயல்கள் என்று எதுவேண்டுமானாலும் செய்யக்கூடும். அவற்றை சமாளிக்க / எதிர்த்து நிற்க நீங்கள் தயாரா?
உங்கள் நிறுவன இரகசியங்களை திருட பல இலட்சம், பல கோடிகளில் கைமாறலாம். அவற்றிற்கு வாய்ப்பளிக்காமல், உங்கள் இரகசியங்களை பாதுகாக்க உரிய ஏற்பாட்டை செய்திருக்கிறீர்களா?
நீங்கள் சொல்லச்சொன்ன தகவல்களை திரித்துக்கூறி குழப்பங்களை ஏற்படுத்தலாம். உங்கள் தகவல் பரிமாற்ற பாதுகாப்பை வெளிப்படையாக்கி உறுதிபடுத்தும் முறையை கட்டமைத்துள்ளீர்களா?
உங்கள் நிறுவனத்தில் யார்யாருக்கு என்னென்ன அதிகாரங்கள், அவற்றை அடுத்த நிலை அதிகாரி ஆய்வு செய்யு முறைமைகள், கால இடைவெளிகள் என்ற வேலை முறைமை முறையாக வகுக்கப்பட்டு கண்டிப்புடன் செயல்படுத்தப்படுகிறதா?
உங்கள் ஊழியர்கள் நடவடிக்கைகளை அவ்வப்போது சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் கண்காணிக்கிறீர்களா?
நீங்கள் சட்டரீதியான பாதுகாப்பு உரிமைகளை [காப்புரிமைகள்.....] பதிவு செய்திருக்கிறீர்களா?
எங்கே? யார்? எப்போது? எதற்காக? எப்படி? உங்களுக்கு எதிராக சதிவேலைகள் செய்வார்கள் என்று கணிக்க முடியாது. எல்லாவற்றிற்கும் நீங்கள்தான் தயாராக இருக்கவேண்டும். எப்படி எல்லைகளில் இருக்கும் இராணுவம், இரவு-பகலென பாராது, எல்லா நேரங்களிலும் தாக்குதல்களை முறியடிக்க ஆயத்தமாக இருக்கிறதோ, அதேபோல, உங்கள் அன்றாட வாழ்வில், வியாபார உறவுகளில், நிறுவன செயல்பாட்டில் எண்ணற்ற ஏமாற்றுதல்களும், துரோகங்களும் நிகழக்கூடும்.
நடைமுறையில் எப்படியெல்லாம் உலகம் செயல்படுகிறது? எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்? நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தவர்கள் எப்படி சதி செய்துள்ளார்கள்? என்று மற்றவர்களின் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். நிறுவனத்தின் கடவுச் சொற்களை திருடி, உள்ளிருந்து கொண்டே எப்படி போலிப் பெயர்களில் ஏமாற்று வேலைகள் நடக்கின்றன, சதிகள் அரகேற்றப்படுகின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள். மற்றவர்களின் அனுபவங்கள்தான் உங்களுக்கான பாடசாலை. அவர்களின் அனுபவத்திலிருந்து நீங்கள் கற்று, முன்ஜாக்கிரதையாக இருந்தால், உங்களைச் சுற்றி அந்த துரோகங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ளலாம்.
ஒருசிலர் பணத்தாசையில் துரோகம் செய்யலாம்;
ஒருசிலர் பயத்தின் காரணமாக துரோகத்திற்கு துணைபோகலாம்;
ஒருசிலர் பொறாமையினால் துலோகத்திற்கு வழிவகுக்கலாம்;
எது எப்படி நிகழ்ந்தாலும்
அதனால் ஏற்படும் நஷ்டம் உங்களுக்குத்தான்!
துரோகிகள் வாழ்கிறார்களோ இல்லையோ
அந்த துரோகங்களை சமாளித்து நீங்கள் வாழவேண்டுமானால்
உங்கள் உள்கட்டமைப்பை, எச்சரிக்கை உணர்வை
பாதுகாப்பு ஏற்பாடுகளை, தகவல் பரிமாற்றங்களை
தொடர்ந்து கவனித்து வாருங்கள்!
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை
ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்!
நீங்கள் ஏமாற்றவும் வேண்டாம்
யாரிடமும் ஏமாறவும் வேண்டாம்!
யாரிடமும் ஏமாறாமல் இருக்க
எல்லாவற்றிற்கும், எல்லா நபர்களுக்கும்
ஒரு எல்லை வைத்து செயல்படுங்கள்!
உங்கள் எச்சரிக்கை உணர்வு மட்டுமே
ஏமாற்றத்தையும், துரோகத்தையும் தவிர்ப்பதற்கான ஒரேவழி!!
- [ம.சு.கு 05.09.2023]
Comments